முதுமையே வலிமை! -
இன்றைய இளமையே
நாளைய முதுமை!
ஞாயிறு போற்றினோம்
வான்மழை போற்றினோம்
காதலர்நாளையும்
போற்றினோம்
முதுமையை ஏன் போற்றுவதில்லை?
முதுமையை
ஒரு சுமையாக நோயாக
தேவையற்ற ஒற்றுப்பிழையாக
பொருளியல் பங்களிப்பை
வழங்காத வறட்டுப் பீடையாக...
உண்பதும் உறங்குவதுமாக
பேசிப்பேசியே சிக்கல்களை
உருவாக்கும்
ஓடாத இயந்திரமாக...
ஓட்டை விழுந்த
படகை
ஒதுக்கி விடுவது போல...
கிழடு சாகவும் மாட்டேங்குது
கட்டிலும் ஒழிய மாட்டேங்குது
பாடாவதி கிழட்டுச் சனி...
இப்படியெல்லாம்
பலவகைப் பழிப்புகளால்
புறக்கணிக்கப்படுவது ஏன்?
காய்க்காத மரங்கள்
வெட்டப்படுகின்றன!
ஆட்டில் மாட்டில்
முதுமை தட்டினால்
அடிமாடுகளாகின்றன!
மானில் புலியில்
ஓடமுடியாத கிழடுகள்
மற்றவைக்கு உணவாகின்றன!
கிழவன் கிழவிகளை
என்ன செய்வது?
உண்ணவோ வெட்டவோ
முடியவே முடியாதே
உயிரைவிடவும் மாட்டார்களே!
சூழ்ந்து கவ்வும் இரங்கத்தக்க
முதுமையைப் போற்றி..
முதுமையே வலிமை
ஓர் அடையாளம்
ஓசையற்ற ஒளிவிளக்கு
வழிகாட்டி
நிழல்தரு மரமென்று
ஏன் நினைப்பதில்லை?
-தென்மாவை தருமு
Go Back