தொலைந்து போன செல்வங்கள் - தமிழ் இலெமுரியா

11 September 2016 1:02 pm

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி இது. மண் சுவரால் கட்டப்பட்டு, நடுவில் முற்றம் வைத்த வீடு அது. பின்புறம் கொல்லையில் சில தென்னை மரங்களும் அதன் நடுவில் கிணறும் இருக்கும். முற்றம் வைத்த வீட்டின் வசதி என்னவென்றால், வீட்டின் உள்ளே நின்றவாறே சூரியனை பார்க்கலாம்; படுத்தவாறே நிலவையும் நட்சத்திரங்களையும் ரசிக்கலாம். ஒருநாள் ஏதோவொரு தின்பண்டத்தை கொறித்துக் கொண்டிருந்தேன். அதில் சில தரையில் சிந்தியிருந்தன. சிறிது நேரம் கழித்து பார்த்தால் எங்கிருந்துதான் அத்தனை எறும்புகள் வந்தனவோ தெரியவில்லை. சில மணித்துளிகளில் சிந்தியிருந்த அனைத்து தின்பண்டங்களையும் எடுத்துச் சென்று விட்டன. எப்படி எறும்புகளுக்கு தின்பண்டம் தரையில் சிந்திய செய்தி உடனடியாக கிடைத்தது? இதற்கு விடை தேடி தொல்காப்பியத்தை நாடுவோம். தொல்காப்பியத்தின் கூற்றுப்படி எறும்பு ஒரு மூவறிவு உயிரினம். அதாவது முதலாம் அறிவு உற்றறிவு (தொடு உணர்ச்சி), இரண்டாம் அறிவு சுவையறிவு (நாக்கு), மூன்றாம் அறிவு முகர்தல் (மூக்கு) ஆகும். பொதுவாக குறைந்த அறிவுடைய உயிரினங்கள், அவற்றுள் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் மிகச் சிறந்த அறிவை பெற்றிருக்கும். அந்த வகையில் எறும்புகள் மிகச் சிறந்த முகர்ச்சி (வாசனை அறிதல்) அறிவு கொண்டவை. இதற்கு அதன் உணர்வு கொம்புகள் உதவுகின்றன. இதனாலேயே இருக்கமாக மூடி வைக்கப்பட்ட தேன் பாட்டிலின் மூடியை எறும்புகள் வட்டமிடுகின்றன. இவ்வாறாக மேற்சொன்ன நிகழ்வுக்கு விளக்கம் பெற்றேன். நிற்க. இன்றைய சூழலுக்கு வருவோம். முன்சொன்ன அதே நிகழ்ச்சி சற்று மாறுபட்ட நகரச் சூழ்நிலையில் இன்று நிகழ்கின்றது. இப்பொழுதும் தின்பண்டங்கள் தரையில் சிந்துகின்றன. ஆனால் பல நேரங்களில் எறும்புகள் வருவதே இல்லை; சில நேரங்களில் மிகவும் தாமதமாக வருகின்றன; அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றன. ஏன் இப்படி? ஏனென்றால் நாம் இப்பொழுது சாப்பிடும் உணவுகள் தரமற்றவை. இவை பெரும்பாலும் (அனைத்தும் அல்ல) இயற்கைக்கு எதிரான முறையில் வேதியியல் உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், இதற்கு அடுத்து பல்வேறு நிகழ்வுகளை கடந்து நம் வீட்டிற்கு வந்து சேரும் வரையிலும் சுவையை அதிகரிக்க, தோற்றத்தை மெருகூட்ட, நீண்ட நாள் இருப்பு வைக்க என்பன போன்ற பல காரணங்களைக் கருதி பல்வேறு வேதியியல் பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. இதன் விளைவுகள் பற்றி அறிந்தோ, அறியாமலோ இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. யாரையும் குறை கூறுவதற்கு இல்லை. இயற்கைக்கு எதிரான இன்றைய வாழ்வியல் அமைப்பில், அவரவர்க்கு உள்ள பொருளாதார நெருக்கடி இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது. இவ்வாறு தரம் குறைந்து இருப்பதாலேயே, இந்த உணவுகளை எறும்புகள் நிராகரித்து விடுகின்றன. இந்த வகையில் எறும்புகள் மிகச் சிறந்த தர உறுதி குறிகாட்டிகளாக (Quality Standard Indicators) செயல்படுகின்றன. இத்தகைய தரமற்ற உணவுகளை நாம் உண்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றோம். இன்று நாம் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இத்தகைய உணவுகளே முக்கிய காரணமாக அமைகின்றன. இத்தகைய உணவுகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு என்னதான் தீர்வு? நம் முன்னோர்கள் வழியில் இயற்கை சார்ந்த வழிமுறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை நாம் சிறிது சிறிதாக உண்ண ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ‘அங்கக உணவுகள்’ என்று பெயர். இவை ஆங்கிலத்தில் ஆர்கனிக் ஃபுட் (Organic Food) எனப்படுகின்றன. சரி, ஆனால் உடனடியாக இந்த உணவு முறைக்கு முற்றிலும் மாற முடியுமா? கடினம். ஆனால் சிறிது சிறிதாக மாற முடியும்! எப்படி? முதலில் காலை உணவுகளை மட்டும் இயற்கை உணவுகளாக உண்ண முயற்சிக்கலாம். அதாவது நம் தாத்தா பாட்டி தலை முறையினர் உண்ட கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, குதிரை வாலி, நாட்டுச்சோளம், வரகு போன்ற சிறு தானியங்களை கஞ்சி அல்லது கூழாகக் குடிக்கலாம்.  இது மிகவும் சத்துள்ள, அதிக ஆற்றலை வழங்கக் கூடிய ஆகாரம். மேலும் அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், மிக விரைவாக தயார் செய்யக்கூடிய இந்த உணவுகள் பெருமளவு நமது நேரத்தை மிச்சப்படுத்தும். இந்த உணவுகள் அளிக்கும் ஆற்றலுக்கு சான்று எனப்பார்த்தால், இதனை உண்ட நம் முன்னோர்களில் ஆண்கள் மிகுந்த உடல்வலு பெற்றிருந்தார்கள். பெண்கள் பிரசவ நாளன்று கூட வயல் வேலைக்கு சென்று, இடையில் அங்கேயே குழந்தை பெற்று, பின்  மிச்ச வேலையை முடித்து வீடு திரும்புவார்களாம். மகப்பேறு  என்பது அவ்வளவு வெகு இயல்பான காரியமாக இருந்தது. ஆனால், இன்று இதை நினைத்து பார்க்க முடியுமா? அடுத்த கட்டமாக, இயற்கை முறையில்  விளைவிக்கப் பட்ட காய்கறிகள், கீரைகள்  மற்றும்  பழங்களை வாங்கி உண்ண ஆரம்பிக்கலாம். இந்த உணவுப்  பொருட்கள்  தற்போது எல்லோருக்கும்  கிடைக்கும்  அளவுக்கு வரத்து (சப்ளை) உள்ளதா? விலை அதிகமா? என்பது போன்ற கேள்விகள்  எழுகின்றன. நடைமுறையில்  உள்ள விவசாயமே பல்வேறு நெருக்கடிகளால்  கைவிடப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில்  இயற்கை விவசாயம்  செய்வதற்கு தொடக்கத்தில்  கூடுதலான உழைப்பு தேவை. எனவே தற்போது சந்தையில் இந்த உணவு பொருட்களின்  வரத்து குறைவாகவே உள்ளது. இந்தக்  காரணங்களால்  இந்த பொருள்களின்  விலையும்  சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இதை காரணம் காட்டி நாம் பின்வாங்குவதை விட அவற்றை அதிகமாக நுகரும் போது, அதன் தேவை அதிகரித்து விளைச்சலும் அதிகரிக்கும் என்பது திண்ணம். சரி, இயற்கை உணவுகளை எவ்வாறு இனம்  காண்பது? இவற்றை எறும்புகள்  விரும்பி உண்ணும். வண்டுகளும்  இதனை விரும்பி உண்ணும். இதன்  சுவை மிகவும்  நன்றாக இருக்கும்; நல்ல வாசனை வரும். சமையல்  செய்முறைகளின்  போது சிறந்த பதங்களைத்  தரும். சிறிது கால பயன்பாட்டிலே நீங்கள்  இதனை நன்கு உணர முடியும். ஆகவே வண்டு இருந்தால் அது தரமான அரிசி என அறியலாம். ஆனால் இன்று கிடைக்கும்  அரிசிகளில்  வண்டுகளைக்  காணவே முடியவில்லை. காலம்  காலமாக இதனை உண்டு வரும்  நம்  முன்னோர்கள்  தொடங்கி, இன்றும்  இதனை உண்டு வரும்  மிகக்  குறிப்பிட்ட எண்ணிகையிலான மக்கள்  வரை இயற்கை சார்ந்த உணவுகள்  அளிக்கும்  நன்மைகளுக்கு சான்றாக அமைகின்றனர். இவர்கள் மற்றவர்களுடன்  ஒப்பிடும்போது நல்ல உடல்  நலத்துடன்  விளங்குகின்றனர். மேலும் இன்றைய அறிவியல்  ஆய்வுகளும்  சிறு தானியங்களில்  ஊட்டச்சத்து (போஷாக்கு) மதிப்பு  அதிகம்  என்றே உறுதி செய்கின்றன. இத்தகைய இயற்கை உணவுகளை மறந்து ஒதுக்கியதால்  இன்று நம்  வாழ்நாளின்  தடங்கள்  விரைவில்  மறைந்து வருகின்றன. அதேபோல நாம்  இழந்த மற்றொரு மாபெரும்  செல்வம் (சொந்தம்  என்றும்  கூறலாம்) மாடுகள். ஆம்  எனக்கு இன்றும்  நினைவிருக்கிறது. சிறு வயதில், எங்கள் வீட்டின் சந்து முனையில் ஒரு கழநீர் பானை இருக்கும். அதில் அரிசி களைந்த நீர் (கழநீர்), வடிகஞ்சி, மீந்த சாதம் மற்றும் காய்கறிகளைக் கொட்டி வைப்பார்கள். இந்த கழிநீரை, மாடு வைத்திருக்கும் வீட்டினர் தினமும் வந்து எடுத்துக் கொண்டு, பதிலுக்கு மாட்டுச் சாணத்தை வைத்து விட்டு போவார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், மாடு வைத்திருப்போர் கழிநீர் எடுக்கும் போது குறைந்த அளவு சாணம் தான் கிடைக்கும். அதுவும் சில நேரங்களில் காய்ந்து போயிருக்கும். இதனை தவிர்க்கவும் அதிக சாணியை குறி வைத்தும் முடிந்தவரை என் அம்மா கழிநீரை தானே ஒரு குடத்தில் சுமந்து சென்று தெருமுக்கில் உள்ள மாடு வைத்திருப்பவரின் வீட்டுத் தொட்டியில் ஊற்றி விட்டு, வரும்போது அதிகளவு ஈரமான சாணத்தை எடுத்து வருவார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் சாணியைக் கொண்டு அன்றாடம் காலையில் வீட்டின் தெருவாசல் தெளிப்பார்கள்; பின்னர் கொல்லை வாசல் தெளிப்பார்கள். வாரம் ஒருமுறை வீட்டிலுள்ள மண்தரை எல்லாம் சாணி கொண்டு மெழுகுவார்கள். மண் அடுப்பையும் சாணம் கொண்டு மெழுகுவார்கள். தானியங்கள் வைக்கும் மூங்கில் கூடை, அரிசி புடைக்கும் முறம் ஆகியவற்றையும் புதிதாக வாங்கிய உடன் சாணம் கொண்டு பூசிய பிறகே புழங்குவார்கள். இது தவிர மிஞ்சும் சாணத்தை வறட்டியாக தட்டி, அடுத்த வீட்டு சுவற்றில் ஒட்டி காய விடுவார்கள். உலர்ந்ததும் இதனை அடுப்பெரிக்க பயன்படுத்துவார்கள். இவ்வாறாக அந்நாட்களில் சாணத்தின் வாசத்திலேயே நிறைய முறை உலவ நேர்ந்தது. அந்த வாசமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைய நவீன உலகில் மிகவும் அருவெறுப்பாக பார்க்கப்படும் இந்த சாணத்தின் பயன்பாடு, நம் வாழ்க்கை முறையில் தொன்றுதொட்டு தொடர்ந்து வருகின்றது. இதில்  மிகச்சிறந்த அறிவியல் காரணங்கள் உள்ளன. சூழலியலில் ஒவ்வொரு உயிரினமும் பல காரணங்களுக்காக மற்ற உயிரினங்களை சார்ந்து வாழ்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஓர் உயிரினத்தை பெரிதும் சார்ந்து வாழ்கின்றன. அந்த வகையில் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையில் மனிதன் பெரிதும் சார்ந்திருக்கும் உயிரினம் மாடுகள். பல்வேறு நிலைகளில் மாடு மனிதனுக்கு உதவி செய்கின்றது. இதனை நம் முன்னோர்களாகிய தொல் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். மாட்டுச் சாணம் என்பது மனிதனுக்குத் தீங்கு செய்யும் பூச்சிகள் முதலான உயிரினங்களை விரட்டும் பொருளாகவும் அதே நேரத்தில் மனிதனுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களை பெருக்கும் ஊடகமாகவும் செயல்படுகின்றது. இவ்வாறாக மனிதனுக்கு தீங்கு செய்யும் நுண்ணுயிர் பெருக்கமும் கட்டுப்படுத்தப் படுகின்றது. மேலும் சாணி மெழுகப்பட்ட தரைகளில், நமக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகி, அவை நமது சுவாசம் வழியே உடலுக்குள் சென்று பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. தவிர, எருதுகள் உழவுத்தொழிலில் பல்வேறு பணிகளை செய்ய பயன்படுகின்றன. இவற்றின் சாணமும் தாவரங்களுக்கு நல்ல உரமாக அமைகின்றன. இத்தகைய காரணங்களால் தொல் தமிழர்கள், தங்கள் வாழ்க்கையில் சூரியனுக்கு அடுத்ததாக மாடுகளுக்கு இரண்டாம் இடத்தை அளித்தனர். இதனை ஒட்டியே தமிழர்களின் இரண்டாவது பெரிய விழாவாக மாட்டுப் பொங்கல் இன்றும் கொண்டாடப் பட்டு வருகின்றது. மேலும் தமிழர் வாழ்வியலில் மாடுகளின் முக்கியத்துவத்தை விளக்கும் சில வரலாற்று குறிப்புகளை பின்வருமாறு காணலாம். இதனாலேயே பிற்காலங்களில் ஒரு மன்னன் போர் தொடுக்கும் போது, முதலில் எதிரி நாட்டின் மாடுகளை போரில் காயமுறாமல் காக்கும் வண்ணம் அவற்றை கவர்ந்து செல்வார்கள். இது ஆநிரை கவர்தல் எனப்படும். இதுவே புறத்திணைகளுள் முதலாவதுதான் வெட்சி ஆகும்.  இதனைப் பெரும் அவமானமாக கருதும் எதிரி நாட்டு மன்னன் இழந்த ஆநிரைகளை மீட்கப் போராடுவார்கள். இது ஆநிரை மீட்டல் எனப்படும். இதுவே புறத்திணைகளுள் இரண்டாவதாக கரந்தை ஆகும். கோ", ஆ (பசு) என்பன மாட்டின் பிற பெயர்களாகும். இதில் "கோ" என்பதற்கு அரசன் எனப் பொருளுண்டு. "ஆ" என்பது தமிழ் மொழியின் இரண்டாவது எழுத்து ஆகும். இவ்வாறாக மாட்டிற்கு அரசனுக்குரிய இடத்தையும் தமிழ் மொழியின் இரண்டாவது இடத்தையும் கொடுத்தனர். மேலும் மாடு என்றால் செல்வம் என்ற பொருளுமுண்டு. இதன் மூலம் மாடு என்பது தமிழர் வாழ்வியல் செல்வமாக கொண்டாடப்பட்டது என அறியலாம்.  இதுபோன்ற இயற்கை சூழலையும்  இயற்கை உணவுகளையும் இயற்கை நமக்களித்த நண்பனையும்  (மாடுகள்) தொலைத்து விட்டு, அதிநவீன வசதி வாய்ந்த மருத்துவமனைகளில் தன்  வாழ்நாளை மீட்டுக்  கொண்டிருப்பது தகுமா? – தீ.கார்த்திக்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி