இலங்கைத் தமிழர்களுக்கு ஐ.நா துரோகம் இழைத்து விட்டது! கனடா நாட்டு செய்தித்தாள் கட்டுரை - தமிழ் இலெமுரியா

11 November 2013 2:15 am

1000 மக்களைப் படுகொலை செய்த இசுரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல்லாயிரக் கணக்கான பொது மக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு டொரன்டோ ஸ்ரார் என்ற இதழில் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகத்தின் பற்றி எழுத்தாளர் ரோசி டி மென்னோ  எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே இலங்கை. இங்கு இடம்பெற்ற போரின் போது விழுந்த கண்ணீர்த் துளிகள் எண்ணுக்கணக்கற்றவை. அதே போன்று போரின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையும் அளவற்றது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது அதில் அகப்பட்டுத் தவித்த மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபை, போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது 40,000 தொடக்கம் 70,000 வரையான பொது மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. 2006 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது மட்டுமின்றி இலங்கை அரசு படைகள் போரின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன. போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களை அந்தப் படைகள் மேற்கொண்டன. செறிவான எறிகணை வீச்சுக்கள், அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமான தொடரணிகள் மீதான தாக்குதல்கள் என எவ்வித பாகுபாடுமின்றி இலங்கை படைகள் தாக்குதல்களை மேற்கொண்டன. போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ‘நம்பகமான’ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செப்டம்பரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிவித்திருந்தார். அத்துடன் இலங்கை அரசு உரிய முறையில் விசாரணையை மேற்கொள்ள முன்வராவிட்டால் அனைத்துலக சமூகமானது தனது சொந்த விசாரணைப் பொறி முறைகளை உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் எனவும் நவிபிள்ளை அறிவித்திருந்தார். 1000 மக்களைப் படுகொலை செய்த இசுரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது என அந்த ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி