மதுரை அருகே பேருந்து விபத்து: குறைந்தது 13 பேர் பலி - தமிழ் இலெமுரியா

7 February 2016 12:33 pm

மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டி என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் சிமெண்ட் லாரி ஒன்றும் மோதியதில் 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலியிலிருந்து குமுளி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, டி. கல்லுப்பட்டி என்ற இடத்தில் தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. சிமெண்ட் லாரியில் வந்தவர்களில் யாருமே உயிருடன் இல்லை. பேருந்தின் டிரைவர் உயிரிழந்து விட்டார். பேருந்தின் சீட்டுக்கு அடியிலும் பயணிகள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு மீட்புப்பணியினரும், காவல்துறையினரும் உடனடியாக மீட்டு 108 வாகனங்கள் மீது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் சீட்டுக்கு அடியில் பயணிகள் சிக்கிக் கொண்டிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் கூறியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து பயணம் செய்த 2 பேர் தவிர அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்றும் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.  பேருந்தும் லாரியும் வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நிகழ்ந்த சாலையில் தொடர்ந்து பலமுறை விபத்துகள் நடந்துள்ளன. அபாயகரமான வளைவுகள் நிறைந்த இந்த இடத்தில் விபத்து நடைபெறாத வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி எண்கள் அறிவிப்பு  இதனிடைய அரசு பேருந்து – லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விபரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருமங்கலம் வட்டாட்சியர் 94450 00591, 94450 00592; மதுரை – 94450 00586. இந்த எண்களில் தொடர்பு கொண்டால் விபத்தில் சிக்கியவர்களைப் பற்றியும் , சிகிச்சை பெறுபவர்களைப் பற்றியும் தகவல் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி