16 December 2014 3:49 pm
ஒரு காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மிகவும் பொருளாதார நெருக்கடிச் சூழலில் இருந்தார். அந்த நேரம் அவர் உடல் நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவச் செலவுக்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. அதனால் சென்னையில் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை விற்க முடிவு செய்தார். அதன்படி ஒரு மார்வாடி நீங்கள் கேட்கிற தொகையைக் கொடுத்து விடுகிறேன். எனவே தனக்கு அந்த வீட்டைக் கொடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், கலைவாணரிடம் அந்த மார்வாடி கேட்ட தொகையை விட இன்னும் குறைந்த விலைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டிருந்தார். கலைவாணர் யோசித்தார்; யாருக்கு அந்த வீட்டைக் கொடுக்கலாம் என்று. இறுதியில் அந்த வீட்டை சிவாஜி கணேசனுக்கு விற்று விட்டார். அந்த நேரம் கலைவாணரிடம் ஒரு செய்தியாளர், மார்வாடி அதிக விலைக்கு கேட்டும் வீட்டைக் குறைந்த விலைக்கு சிவாஜிக்கு விற்று விட்டீர்களே ஏன்? என்றார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன், நான் இந்த வீட்டை மார்வாடிக்கு விற்று இருந்தால் எனக்கு அதிகப் பணம் கிடைத்திருக்கும். ஆனால் நாம் வாழ்ந்த இந்த வீட்டில் ஒரு மார்வாடி வாழ்கிறார் என்னும் எண்ணம் ஏற்பட்டு வருந்த வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நாம் வாழ்ந்த இந்த வீட்டில் நம் தம்பி வாழ்கிறான் என்று மகிழ்ச்சியடைகிறேன் என்றார் சிரித்துக் கொண்டே."