15 October 2015 2:48 pm
இந்திய அணுசக்தி கழகத்தின் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி இன மக்கள் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பாக தந்தை பெரியார் 137வது பிறந்த நாள் விழா மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ள புத்தவிகார் அரங்கத்தில் முதன் முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய அணுசக்திக் கழகத்தின் அகில இந்திய அமைப்பான தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் பணியாளர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் முதன்மை விருந்தினராக மும்பை வருமானவரித் துறை துணை ஆணையர், அரவிந்த் சொன்டேக்கே மற்றும் சிறப்பு விருந்தினர்களான இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழக இயக்குனர் திரு வரதராசன், இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ் இலெமுரியா திங்களிதழின் ஆசிரியருமான சு.குமணராசன் ஆகியோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து அவர் வாழ்க்கை வரலாறு, சமுகப் பணிகள், பகுத்தறிவு குறித்து மராத்தி, இந்தி, ஆங்கில மொழிகளில் சொற்பொழிவாற்றினார். மாணவர் சொற்பொழிவு மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மும்பைத் தமிழ் பள்ளி மாணவ மாணவியர்களிடேயே பெரியாரியல் சிறப்புச் சொற்பொழிவு காலையில் பாண்டுப் பிரைட் உயர்நிலை பள்ளியிலும் மாலையில் தாராவி கம்பன் பள்ளியிலும் நடைபெற்றது. நிகழ்வுக்கு மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் மு.சசிகுமார் வரவேற்புரையாற்ற மனிதநேய இயக்கத்தின் மும்பை ஒருங்கிணைப்பாளர் பி.கே.சங்கர் டிராவிட் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத்தின் தலைமை கழகச் சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பிரைட் தமிழ் பள்ளியிலிருந்து மாணவிகள் கௌசல்யா, சந்தியா ஆகியோரும் கம்பன் தமிழ் பள்ளி மாணவி சுரேகா, மாணவர்கள் ரோகித், சந்தோசு ஆகியோரும் பங்கேற்று தந்தை பெரியாரின் சமுதாய தொண்டினை கருத்துரையாக வழங்கினர்.