சிலப்பதிகாரச் செய்தி என்ன? - தமிழ் இலெமுரியா

18 April 2015 7:01 pm

இளங்கோவடிகளின் படைப்பாகிய சிலப்பதிகாரம் அவருடைய கற்பனைப் படைப்பு அல்ல. நடந்த ஒரு சோகச் சம்பவத்தை இளங்கோவின் சமகாலப் படைப்பாளியான சாத்தனார், முடிகெழு மூவேந்தருக்கு உரியது இது. அதனால் அடிகள் நீரே அருளுக" எனச் சொல்லியதால் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம்."அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும்""உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்""ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"என முப்பெரும் உண்மைகளைச் சிலப்பதிகாரம் பேசுவதாகப் பண்டிதர்கள் பலர் கூறுவர். இம்முப்பெரும் உண்மைகளை மறுவாசிப்பு என்ற அமிலச் சோதனைக்கு உட்படுத்திப் பார்ப்பது சிலப்பதிகாரத்தை எவ்வகையிலும் சிறுமைப்படுத்துவது ஆகாது. சத்தியத்தை தேடுவது என்பது "ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தை" அறிந்து கொள்வதற்கான நல்ல முயற்சிதான். வடமொழியில் சத்தியம் என்பதைத்தான், வள்ளுவர் மெய்ப்பொருள் என்கிறார். பொதுவாகச் சத்தியம் என்பது என்றும் மாறாதது என்பார்கள். அதையும்விட ஆழமாகச் சொல்வதென்றால் எது மாறாததோ அதுதான் சத்தியம் எனலாம். ஒரு தத்துவ மேதை சொன்னார்: "மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எது நிரந்தரமானது என்றால், அந்த மாறுதல்தான் நிரந்தமானது (Change is Permanent)." என்றார். மாறுதல் என்பது தொடர் நிகழ்வு; முடிவற்றது. நமது மொத்த வாழ்க்கையும் சிலப்பதிகாரம் பேசும் மூன்று பேருண்மைகளுக்குள்ளேயே அடங்கிவிடுமா? வாழ்க்கையில் வேறு அம்சங்களே இல்லையா? எனக் கேட்பதும் நியாயமானதுதான். வாழ்க்கை என்பது உழைப்புச் சார்ந்தது. தொண்டுக்கு உரியது. தியாகத்திற்கும் இடம் தருவது. சிலப்பதிகாரம் பேசும் மூன்று உண்மைகளுக்குள் இப்படிப்பட்ட பல உன்னதங்கள் இடம்பெறவில்லை. இந்தப் புரிதலோடு இளங்கோவடிகள் கண்ட, – காட்டிய, – நாட்டிய அம்மூன்று பேருண்மைகளையும் அலசுவது அவசியப்படுகிறது. ஏனெனில், சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற பாண்டியன் நெடுஞ்செழியன் மனச்சாட்சியுள்ள ஒரு தனி மன்னனாக இருந்ததால் "யானோ அரசன்? யானே கள்வன்" என்று அதிர்ச்சியடைகிறான். அநேகமாக இக்கால வார்த்தையில் அதனை "மாரடைப்பு மரணம்" என்றால் தவறில்லை. காரணம், அவன் செய்த பிழை, நிரபராதியைக் குற்றவாளியாகக் கருதி அவன் "கையில் சிலம்பு இருக்குமானால், அவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று அவசரமாக வாய்மொழி உத்தரவிட்டதுதான். இதுதான் "அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவது" என்பதாகக் காட்டப்படுகிறது. நடைமுறை வாழ்க்கையில் அரசனைப் போல அதிகாரமுள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு இதனைப் பொருத்திப் பார்த்தால்தானே! இதனை எக்காலத்துக்கும் உரிய சத்தியம் என்று கூற முடியும்.அந்தப் பொருத்தப்பாட்டைச் செய்து பார்த்தால், இந்திய அரசியலில் மனச்சாட்சியுள்ளவராக நமக்குக் காந்தியடிகள் ஒருவர் மட்டும்தான் மிஞ்சுகிறார். அநேகமாக அனைத்து அரசியல்வாதிகளும் பல்வேறு அரசியல் பிழைகளை அனுதினமும் செய்பவர்களாகவே உள்ளனர். அவர்களிடத்தில் காணப்படும் மாபெரும் குறைபாடே, அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்பதுதான். "அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்" என்பதில் உள்ள இந்த "அறம்" எதைச் சுட்டுகிறது? சிலப்பதிகாரம் சம்பந்தப்பட்ட அளவில், அது பாண்டிய மன்னனுடைய மனச்சாட்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறது. தனக்குத் தெரியாமல் தவறு செய்துவிட்ட மன்னன் அவன். தவறு செய்ததைத் தெரிந்து கொண்ட பிறகு, தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக் கொள்கிறான். மனச்சாட்சி என்பது அரசியலில் செத்துப் போய்விட்டதென்றால், அதனால் ஏற்படும் இழப்பு இளங்கோவடிகளுக்கு அல்ல. இங்குள்ள சக மனிதர்களான நமக்குத்தான். காவல்துறை கண்காணிப்பதனால்தான் இவன் ஒழுங்காக இருக்கிறானே தவிர, சந்தர்ப்பம் கிடைத்தால் இவனும் சறுக்கி விழுந்து விடுவான் என்பது மனச்சாட்சியின் மகத்துவத்துக்குச் செய்யப்படும் மாபெரும் அவமானமாகும். ஆகவே, பயன்பாட்டுப் பார்வையில் பரிசீலித்தால், சிலப்பதிகாரம் பேசுகிற முதல் பேருண்மை, செப்பனிட முடியாத அளவிற்குச் சேதத்திற்கு உள்ளாகிறது. "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்" என்ற இரண்டாவது பேருண்மையும் இதுபோலவே நம்மைச் சிந்திக்க வைக்கிறது. சிலப்பதிகாரத்தில் நாம் சந்திக்கிற பாத்திரங்களில் கண்ணகி ஒருத்தி மட்டும்தான் கற்புள்ளவளா? பிரபலமில்லாத பாத்திரங்களாகிய தேவந்தி என்ன கற்பு நெறி இல்லாதவளா? வயந்தமாலைக்குக் கற்பு இல்லையா?. இடைச்சேரியிலே கண்ணகி தங்கியிருந்த மாதரி குடும்பத்து மகளிர்களுக்குக் கற்பு இல்லையா? அவ்வளவு ஏன்? கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லனின் மனைவி கூட இந்தக் கற்புநெறிப் பட்டியலில் இடம்பெறத் தக்கவள்தானே!. சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மகளிரையும் கற்புள்ளவர்களாகக் கருதுவதுதானே நயத்தக்க நாகரிகம். இங்கிலாந்து இளவரசி டயானாவின் கணவர் சார்லஸ் திருமணத்திற்கு முன்பே கமிலா பார்க்கர் என்ற தன்னைவிட மூத்த பெண்ணோடு வாழ்ந்த வாழ்க்கையை ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தைப் படித்த டயானா அதிர்ச்சிக்கு உள்ளானார். நம்பிக்கை சிதறிய நிலையில் சுய சித்ரவதை செய்து கொண்டார். டயானாவை லண்டன் பி.பி.சி. பேட்டி கண்டது. அதில் அவர் பேசியபோது, மனைவிக்கும் கணவனுக்கும் மத்தியில் மூன்றாம் நபர் பிரவேசிப்பாரானால், மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டுவிடும் என்றார். ("if a third person comes between husband and wife, it would be too crowded"). இந்தக் கருத்தில் தொனிப்பது எது? தான்மட்டுமல்ல், தனது கணவனும் கற்புடையவனாக இருக்க வேண்டும் என்பதுதானே டயானாவின் எதிர்பார்ப்பு. ஐரோப்பிய நாகரிகத்தில்கூட கற்புக்குக் கவனிக்கத்தக்க இடமிருக்கிறது. இளமையாக இருந்த கண்ணகியுடைய கற்புக்குத் தேக ரீதியாக எவ்வித ஆபத்தும் பூம்புகாரில் ஏற்படவே இல்லை. கணவன் இருந்தும் அவனை இழந்தவளாகிவிட்ட, இளம் பெண் கண்ணகி பட்ட துயரம் கவலைக்குரியதே தவிர, கண்ணகியின் கற்புக்கும் அத்துயரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற வரியைப் படித்து விட்டு, பண்டிதர்களைப் போல் அல்லாமல் பாரதி வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். அந்தச் சிந்தனை இளங்கோவடிகளின் மீது செய்யப்பட்ட விமர்சனமாகக்கூட இருக்கலாம். கற்புடைய பெண்டிரை உயர்ந்தவர்கள் பாராட்டுவார்கள் என்று இளங்கோவடிகள் சொல்லி வரும்போதே, பாரதி ஏதோ குறுக்கீடு செய்தது போல், கற்பு நிலை என்று பேசவந்தார் – இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்கிறார். இளங்கோவடிகளே சிந்திக்காத "ஆண் கற்பு" பற்றிய பாரதி சிந்தனை இளங்கோ கால்த்தில் இல்லை. ஆடவன் ஒருவன் கற்புள்ளவனாக இருந்தால்தான் பெண்ணும் கற்புள்ளவனாக வாழ முடியும். ஆடவன் சபலமானவனாக இருந்தால், அவனால் அல்லது அதனால் யாரோ ஒருத்தி கற்பிழந்து விடுகிறாளென்றுதானே பொருள்? ஆண்கள் கற்பு இல்லாதவர்களாக நீடிக்கும் வரை, பெண்கள் கற்புள்ளவர்களாக இருப்பது சாத்தியமாகாது என்பது தர்க்க ரீதியானது. கம்பன் காட்டிய ராமன், ஏகபத்தினி விரதனாக இருந்தான். கற்புள்ள ஆடவனாக அவன் இருந்த காரணத்தால்தான் சீதையின் சொற்களுக்கே சுடுகிற அந்த ஆற்றல் வாய்த்தது என்கிறார் கம்பர். இளங்கோவடிகள் காட்டும் கற்புநெறி கண்ணகிக்கு மட்டுமே என இதைக் குறுக்கி விடுவதா? அல்லது சமுதாயம் முழுவதற்குமே உரியது என விரிவாக்குவதா? எனக் கேட்க வேண்டியிருக்கிறது. ஜான்சிராணி லட்சுமிபாய் பிரிட்டிசு படையை எதிர்த்துக் குதிரையில் அமர்ந்து போர் புரிந்த வீராங்கனை. அந்த வீராங்கனை எதிர்த்துப் போரிட்டது ஒரு வீரனைத்தான். ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கையைப் பிரபலப்படுத்தியது, அவள் வீராங்கனையாக இருந்த அச்சமற்ற அச்செயல்தானே. இதேபோல, இன்றைக்கும் மணிப்பூர் மாநிலத்தில் ஐரோம் சர்மிளா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்திலுள்ள நமது மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தை எதிர்த்து உண்ணா நோன்பு மேற்கொண்டு வருகிறார். வாயால் அவர் உண்ணுவதில்லை. அதனால், மணிப்பூர் மாநில அரசு அவருக்கு மூக்கில் குழாய் சொருகி, வலுக்கட்டாயமாக உணவு செலுத்திக் காப்பாற்றி வருகிறது. கைதாவதும், பிறகு விடுதலையாவதுமாக அப்பெண்ணின் வாழ்க்கை 40 வயதைக் கடந்து கொண்டிருக்கிறது. வரலாறு அப்பெண்ணை வீராங்கனையாத்தான் வருணிக்கிறது. இவர்களை வீராங்கனைகளாகப்  பாராட்டாமல் கற்புக்கடம் பூண்ட மங்கையர் திலகமென்று பாராட்டுவது அவசியமில்லாததாகும். இதே போலத்தான் கண்ணகி மதுரையில் உறவுகளோ, நண்பர்களோ இல்லாத ஊரில், இருந்த கணவனும் கொலை செய்யப்பட்ட பிறகு ஆவேசத்தோடு தலைவிரிக்கோலமாக அச்சமில்லாமல் வீதியில் வருகிறாள். அரசனையே பார்த்துக் கேள்வி கேட்கிறாள். அவள் மனம் எரிவது போல மதுரை எரிகிறது என்கிறது சிலப்பதிகாரம். இங்கே கண்ணகியின் கற்பைப் பிரபலப்படுத்துவதா, அவள் வீரத்தைப் பிரபலப்படுத்துவதா? கற்புடைய பல பெண்டிர் கண்ணகியைப் போல வீராங்கனைகளாக இல்லை. ஆகவே, சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மெச்சி உச்சப்படுத்துகிற அம்சம் அவளது வீரம்தானே தவிர, கற்பு அல்ல. "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்பது மூன்றாவது பேருண்மை. முந்தைய ஜென்மத்தில் பாவங்கள் செய்திருப்பானேயானால், அந்தப் பாவங்கள் அந்த வினைக்கு உரியவனைச் சென்று பழி வாங்கியே தீரும் என்பதே வினைக்கோட்பாடு. இந்தப் பேருண்மையை நமது நடைமுறை வாழ்க்கையில் எப்படி உணர்வது? உணர்ந்தால்தானே, அது ஊட்டுகிற அச்சத்தால் மனிதர்கள் தவறு செய்யாமல் தடுக்கப் படுவார்கள். கிடைக்கிற புள்ளி விபரத் தகவல்களின்படி பார்த்தால், கொடூரக் குற்றங்களுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதனாலேயே சமூகத்தில் குற்றங்கள் குறையவில்லை என்கிறார்கள். அதனால், தூக்குத் தண்டனையை 69 நாடுகள் ரத்து செய்துவிட்டன். சில நாடுகளில்தான் தூக்குத் தண்டனை இன்னும் நீடிக்கிறது. இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையில் வெளிச்சம் படாமல் இருக்கும் முக்கியமான அம்சம், ஊழ் என்பது. அந்த ஊழ் ஏதோ தானியங்கி ஏவுகணை போலப் புறப்பட்டுப் போய்த் தவறு செய்பவனைத் தண்டித்து விடும் என்று மக்கள் அதற்கு அஞ்சுகிறார்களா? ஊழ் பற்றி விமர்சித்தால் சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஏனெனில் 700 கோடி உலக மக்களில் 100 கோடி கிறித்தவர்களுக்கு ஊழ் மீது நம்பிக்கை இல்லை. 120 கோடி இஸ்லாமியர்களுக்கும் ஊழ் பற்றித் தெரியாது. மறுபிறவியை மறுப்பவர்கள் அவர்கள். மேலும் 120 கோடி பௌத்தர்களுக்கும் இதைப் பற்றிய சிந்தனையில்லை. இதேபோல்தான் சீக்கியர்களும், பார்சிகளும், இஸ்ரேலியர்களும் இருக்கிறார்கள். ஊழ் என்பது சமண சமயக் கோட்பாடாக மட்டுமே இருந்து, சைவத்திலும், வைணவத்திலும் அது ஊடுருவி உள்ளது. ஊழ் பற்றித் தெரிந்தோ, தெரியாமலேயோ இருக்கிற பல இந்துக்களுக்கு இது பற்றிய புரிதலும் போதுமானதாக இல்லை. அதனால், இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையான ஊழ் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஊழ் என்பதை மனித குலம் முழுவதுமே உண்மையென நம்பி, விநாடிப் பொழுதுகூட அதற்கு விடுமுறை கொடுக்காமல் கடைப்பிடிக்குமானால், நமக்குக் காவல்துறை தேவையில்லை. நீதிமன்றம் அவசியமில்லை. கைரேகை நிபுண்ர்களோ, சி.ஐ.டி.களோ எதற்காக? ஊழ் என்பதை இல்லையென்று சாதிப்பதால் ஏற்படும் இழப்பு இளங்கோவடிகளுக்கு அல்ல, நமக்குத்தான். இம்மூன்று பேருண்மைகளையும் சிந்தனைத் தராசில் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால், மூன்றுமே எடையிழந்து போகின்றன. ஆனாலும் சிலப்பதிகாரக் கதை அமைப்பு, வருணனை, பாத்திரப் படைப்பு, இயற்கைச் சித்தரிப்பு அனைத்திலும் தமிழ் அமுதம் தளும்பி வழிகிறது. "திங்களைப் போற்றுதும்" என்ற சிலப்பதிகார முதல் வரியே "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்ற சேக்கிழாரின் செந்தமிழ் வரியை விஞ்சுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும்  நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்", போற்றா ஒழுக்கம் புரிந்தீர், கரும்பே தேனே, மாலை வாராராயினும் காலை காண்குவம், ‘‘நடந்தாய் வாழி காவேரி" முதலிய சிரஞ்சீவித்துவமான கவிதை வரிகள், வாசகர் மனதை அடிமை கொண்டு விடுகின்றன. முப்பெரும் உண்மைகளைப் பற்றிப் பேசாத பாரதி, நெஞ்சை அள்ளிய சிலப்பதிகாரம் என்று எதை எண்ணிக் கூறினான் என்பதை யோசிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இந்த மானுடச் சமூகம் இயங்க வேண்டுமானால், அதற்கான சாசுவதமான நெறிகள் மிகமிக அவசியம். விலங்குகளுக்கு அந்நெறிகள் தேவையில்லை. அவை பசித்தால் உணவைத் தேடும். பருவம் வந்தால் இனவிருத்தியில் ஈடுபடும். மனிதன் விலங்கு அல்ல. அவனுக்கு ரசனை உணர்வு உண்டு. அவன் ஆக்கப்பிறந்தவன். அவனுக்கு இரக்கம் சுரக்கிறது. அவன் கற்பனையும், சிந்தனையும் உள்ளவன். மனிதனுக்கான மகத்தான இந்நெறிகளைச் சிலப்பதிகாரம் பட்டியலிட்டுள்ளது."பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;ஊன் ஊண் துறமின்; உயிர்கொலை நீங்குமின்;தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;பொய்க் கரி போகன்மின்; பொருள் மொழி நீங்கன்மின்;அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;பிறர்மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; அறமனை காமின்; அல்லவை கடிமின்;கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையாஉளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்" என இந்த 21 நெறிகளும் ஒரு வேளை பாரதியின் "நெஞ்சை அள்ளி" இருக்கலாம் அல்லவா? எது எப்படியாயினும் இந்த நெறிகள் சிலப்பதிகாரப் பாயிரத்தில் பதிவாகியுள்ள முப்பெரும் உண்மைகள் அல்ல என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். பெ.சிதம்பரநாதன், கோவை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி