9 November 2015 10:59 am
வட இந்திய மாநிலமான பிஹாரில் நிதிஷ்குமார்-லாலு பிரசாத் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுகிறது. இதுவரை வெளியாகியுள்ள முன்னணி/முடிவுகளின்படி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியோரை உள்ளடக்கிய மகாகூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 123 இடங்களை விட கூடுதலான இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கூட்டணியின் தலைவரான நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெற்ற பிஹார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மக்களிடையே நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பின் அடிப்படையில் வெளியான அனைத்து முடிவுகளும் பொய்த்துப் போயுள்ளன. பிஹார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்கட்சிகள் கூறியுள்ளன. இந்த முடிவுகள் தமது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதை பாஜக ஏற்றுக்கொண்டாலும், மோடி அரசு மீது இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளனர்.