16 August 2016 6:50 pm
அண்ணா நூற்றாண்டை ஒட்டி தமிழக சிறைகளிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2008 ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நூற்றாண்டையொட்டி, 1405 சிறைக் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி உத்தரவிட்டார்.அதன்படி, ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15.09.2008 அன்று, 7 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்களும் விடுதலை அளிக்க முடிவுசெய்யப்பட்டது.இந்த அடிப்படையில் தமிழக சிறைகளிலிருந்து 22 பெண் கைதிகள் உட்பட, 1405 பேர் செப்டம்பர் 15ஆம் தேதியன்று விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது. புழல் சிறையிலிருந்து 111 பேர், கோவை மத்திய சிறையிலிருந்து 296 பேர், பாளையங்கோட்டை சிறையிலிருந்து 273 பேர் உட்பட 1405 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.இதனை எதிர்த்து, அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், பெருங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும், ஆகவே அவர்களை திரும்பவும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார்.இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்றும் சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தைச் சான்றுகளின் அடிப்படையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நல்லெண்ண அடிப்படையில் இந்த வழக்கில் கைதிகள் விடுவிக்கப்பட்டது செல்லும் என்றும், 8 ஆண்டுகளாக விடுதலை பெற்று வாழ்பவர்களை மீண்டும் 1405 பேரை சிறையில் அடைப்பது சட்ட ரீதியாக சரியாக இருக்காது என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி உத்தரவிட்டனர்.இந்தத் தீர்ப்பு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எதிர்காலத்தில் கைதிகள் விடுதலைக் குறித்து வழக்கு வந்தால், அந்த வழக்கின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதற்கு முன்னதாக, இந்தக் கைதிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது.