15 December 2016 4:22 pm
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது தமிழ் முன்னோர்கள் தங்கள் துய்ப்பின் மூலம் அறிந்த உண்மை. தமிழ் மொழியினை நன்கு உணர்ந்தோர் அறிந்தோர் எவரும் தன் வாழ்க்கையின் வளம் நலம் அனைத்திற்கும் ஊற்றாக அமைவது அம்மொழியின் இலக்கியங்களே என அறுதியிட்டுக்கூறுவர். அந்த அளவுக்கு வளமான சிந்தனைகளையும் மனித உடம்பை நல்நிலையில் பாதுகாப்பதற்கென எண்ணற்ற செய்திகளையும் கொண்டுள்ளன. அதையே வள்ளுவர், மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"என ஈரடிகளில் எழுதி வைத்தார். இந்த உணர்வுகளை உண்மைகளை தன் சிந்தையில் ஏற்றிய தமிழ் அறிஞர் மு.இராமகிருட்டிணனார்’ நாம் தமிழுக்குத் தொண்டு செய்வதன் ஒரு பகுதி தமிழ் மக்கள் பேணுவதற்குரிய இயற்கை மருத்துவத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்கு உணர வைப்பது என்ற இலட்சியத்துடன் பணியாற்றி வாழ்ந்து மறைந்தவராவார். இவர் ஒரு நல்ல தமிழறிஞராகவும் தனித்தமிழ் இயக்க ஆர்வலராகவும் பணியாற்றியவர். ஆனால் தமிழுக்குத் தொண்டு செய்வதை விட தமிழ் மக்களுக்கு தொண்டாற்றுவதே மேல் என தமிழ் கூறும் இயற்கை மருத்துவத்தைக் காப்பதற்காக வேண்டி தன் ஓய்வூதிய தொகை முழுவதும் கொண்டு ஓர் ஆசிரமத்தை நிறுவி அவரும் அவருடைய துணைவியார் திருமதி ஆழ்வாரம்மாள் அவர்களும் தொண்டாற்றி மறைந்துள்ளனர். அந்தத் தொண்டின் தொடர்ச்சியாக அவர்களின் மகன் டாக்டர் நல்வாழ்வு அந்த இயற்கை மருத்துவ மையத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழில் அழிந்து போன மருத்துவ நூல்கள் ஏராளம். அகத்தியர் பன்னிருகாண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர் மூலிகைப் பயன், கொங்கணவர் மூவாயிரத்து நூறு, பதஞ்சலி, சட்ட முனி, நிகண்டு, காலங்கிநாதர் நூறு காண்டம், மச்சமுனி ஏழு காண்டம் என பல நூல்கள் இன்று இல்லை. ஆனால் இந்த நூற்களில் சொல்லப்பட்டுள்ள மருத்துவத்தை செவிவழிச் செய்தியாகவும் சொந்த முயற்சியாலும் அறிந்து தமிழ் மக்களுக்கும் உலக மாந்தர்களுக்கும் பயனுறும் வகையில் முன்னெடுத்துச் சென்ற ஒரு சிலரில் மூ.இராமகிருட்டிணார் முன்னிலை வகித்தவர். திருநெல்வேலி மாவட்டம் – ஆழ்வார் குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. எம் நண்பர் திரு செல்வகுமார் கருப்பண்ணன் அவர்களை சென்னையில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து உசாவியபோது இந்த நல்வாழ்வு மையத்திற்கு அவர் சென்று வந்ததாகவும் அதன் தனித்தன்மைகள் குறித்தும் எம்மிடம் விளக்கி மகிழ்ந்தார். அந்த உந்துதலின் பேரில் நாமும் கடந்த திங்கள் பத்து நாட்கள் சிவசைலம் சென்று வந்தோம். அங்கு எமக்குக் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வது நம் வாசகர்களுக்கும் பயன் தரும் என்று நம்புகின்றோம். சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. காலை நம்மை எழுப்புவது பறவைகளின் இனிய குரல்களே. மயில்கள் ஆங்காங்கே ஆடித் திரிகின்றன, அடர்ந்த தோப்பு அங்கு வீசும் காற்று அனைத்தும் மூலிகை மணம் பரப்புகிறது. ஆசிரமத்தில் காலை 6 மணிக்கெல்லாம் சூடான சுக்குமல்லி காப்பி, கருவேப்பிலைச் சாறு குடிப்பதற்குக் கிடைக்கும். 7 முதல் 8 மணிவரை யோகா பயிற்சி தருகிறார்கள். பயிற்சிக்குப் பிறகு மண் பட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு 20 நிமிடம் படுத்திருக்க வேண்டும். ஈர மண்ணை குழப்பி துணியில் நிரப்பி அதை செவ்வக வடிவில் மடித்து வயிற்றில் வைத்து விடுவார்கள். இதைத்தான் மண்பட்டி என்று சொல்கிறார்கள். அடி வயிற்றுச் சூட்டை அள்ளிக் கொண்டு சென்றுவிடும் இந்த மண் பட்டி. காலை 8 மணியளவில் மருத்துவர் நல்வாழ்வு உங்கள் எடையை பரிசோதிப்பார். பிறகு உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பார். உடன் செவிலியர்கள் இருப்பார்கள். அன்றைய நாளில் உங்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர் செவிலியரிடம் தெரிவிப்பார். மண்குளியல், வாழை இலைக்குளியல், ஆயில் மசாஜ், முதுகுக்குளியல், முழுத்தொட்டிக் குளியல், இடுப்புக் குளியல், நீராவிக் குளியல் என்று நாள்தோறும் சிகிச்சைகள் மாறிமாறி தொடர்ந்த வண்ணம் இருக்கும். சில ரசாயனக் கலப்பற்ற சித்த மருந்துகளும் நோய்க் கேற்றவாறு பரிந்துரை செய்கிறார்கள். மண்குளியல் என்பது ஈரமண்ணை உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பூசிவிடுவது. பிறகு 1 மணிநேரம் வெயிலில் நிற்பது. இப்படி நிற்கும் போது உடலில் உள்ள சேறுகொஞ்சம் கொஞ்மாக காய்ந்து விடும். பிறகு உடல் இருக்கும் இந்த மண்குளியலால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சரி செய்யப்படும். தோல் நோய் குணமடையும். உடலில் வெப்பம் குறையும். தோலில் உள்ள வியர்வை அடைப்புகள் அகற்றப்பட்டு வியர்வை தடையின்றி வெளிப்படும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அழகான இதமான ஒரு குளியல் காத்திருக்கும். குளிப்பதற்கு முன் இறைப்பான் (மோட்டார்) போட்டு விடுவார்கள். காய்ந்தமண் உடலில் இருந்து எளிதாக வெளியேறும் விதமாக அருவியில் குளிப்பது போன்று உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும்படி அமைத்துள்ள முறை உங்களை நீண்டநேரம் நீராடத் தூண்டும். வாழை இலைக்குளியல் என்பது நண்பகல் மொட்டைமாடி வெயிலில் பாய்விரித்து அதன் மேல் வாழை இலையை பரப்பி, அதில் படுக்க வைத்து, வாழை இலை கொண்டு நம்மை மூடி மூச்சுக் காற்றுக்கு தடை ஏற்படாதவாறு கட்டி விடுவார்கள். 10&-15 நிமிடங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள நாட்பட்ட வியர்வைக் கழிவுகள் லிட்டர் கணக்கில் வெளியேறும். இதே போல வியர்வைக் கழிவுகளை வெளியேற்ற நீராவிக் குளியலும் நடைபெறும். இது போக சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆயில் மசாஜ் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தை எளிதான முறையில் வெளியேற்ற முதுகுக் குளியல், முழுத் தொட்டிக் குளியல், இடுப்புக் குளியல் என்று இயற்கையான இனிமையான தனித்தனி சிகிச்சை முறைகளும் உண்டு. உணவு முறைகளில் குறிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது உப்பு, புளிப்பு, காரம் தவிர்த்தும் சமைக்காத இயற்கை உணவுகள் மட்டுமே. காலை 11 மணிக்கு வெல்லம் கலந்த அவல், கூடவே தயிர், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கொஞ்சம் மிளகுதூள் கலந்த அவல் அது போக தேங்காய் துருவல் போட்ட அவல் மற்றும் வாழைப்பழம் கிடைக்கும். இதன் பிறகு நண்பகல் 12.30 மணி, 2- மணி, 3.-30 மணி, மாலை 4-.30 மணி, 5-.30 மணிகளுக்கு திரவ உணவு மருத்துவர் அறிவுரைப் படி வழங்குவார்கள். கேரட்சாறு, தர்பூசணிசாறு, வெந்தயம் + மோர்கலவை, இளநீர், வில்வ இலைச்சாறு, நெல்லிச்சாறு, சாத்துக்குடிசாறு, பார்லி, சுக்குமல்லி காபி, மோர் மற்றும் வேக வைத்த உப்பிடாத கேழ்வரகு கூழ் கிடைக்கும். உரிய நேரத்தில் அவரவர்களுக்கு என்ன திரவ உணவு உள்ளது என குறிப்பேட்டில் பார்த்து அதன்படி நமக்கு உரியதை எடுத்துச் சுவைக்கலாம். மாலை 4.30 முதல் 5.30 மணிவரை யோகாப் பயிற்சி நடைபெறும். பிறகு இரவு 7 மணிக்கு இரவு உணவு தயாராகி விடும். இரவு உணவு எப்போதும் பழங்கள் மட்டுமே. தேங்காய், பேரீச்சம் பழம், திராட்சை, கொய்யா, தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம், அன்னாசி, வெள்ளரி, பப்பாளி, வாழைப்பழம் என அந்தந்த பருவத்தில் கிடைக்கக் கூடிய பழங்களும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்கும் பழங்களுமாக வைத்திருப்பார்கள். தேவையான அளவு பழங்கள் சாப்பிடலாம். நம்முடைய அறைக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். தேங்காய் துருவலுடன் முளைகட்டிய ஏதாவதொரு பயறும் இரவு உணவில் உண்டு. இதன் பிறகும் இரவில் பசிக்கும் உணர்வு ஏற்பட்டால், இதனால் தூக்கம் தடைபட்டால், சோர்வு ஏற்பட்டால் வெந்நீரில் சிறிதளவு தேன்கலந்து தருவார்கள். அதைக் கலந்து குடித்ததும் பத்தாவது நிமிடத்தில் பசி மறைந்து, சோர்வு களைந்து தூக்கம் உங்களைத் தழுவிச் செல்லும். சிகிச்சை பெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை கட்டாயம் இனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமா என்பது குழாய் (டியூப்) வழியாக ஆசனவாயில் தண்ணீரை செலுத்தி மலக்குடலில் இருகிக் கிடக்கும் நாட்பட்ட மலக் கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான முறையாகும். இதனால் மலக்குடல் குளிர்ச்சியடைந்து மலச்சிக்கல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிகிச்சை நாட்களில் மூன்று முதல் 5 நாட்கள் வரை உண்ணாநோன்பு (பாஸ்டிங்) இருக்க வேண்டி வரலாம். இந்த நாட்களில் உங்கள் உடலிலிருந்து நிறைய நாட்பட்ட மலக் கழிவுகள் வெளியேறுவதைக் கவனிக்கலாம். இப்படி 10 நாட்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும் போது உங்கள் உடலில் புது ரத்தம் ஓடும் உணர்வை உங்களால் கவனிக்க முடியும். காலை, மாலை யோகாப் பயிற்சியின் மூலமாக வளையாத உடல் நாணலாய் வளையும் வியப்பைக் காணலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் கோரைச் சித்தர் வாழ்ந்த மலைக்கு நடந்தே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயண அனுபவம் மிகவும் சுவையானது. அடர்ந்த காடுகளுக்குள் சற்றொப்ப 5.கி.மீ. பயணம் ஒரு புது அனுபவம். அருகிலுள்ள பாபநாசம் அணை, அகத்தியர் அருவிக் குளியல் என உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறது. யோகப் பயிற்சியும் இயற்கை உணவும் சாத்தியமாகி விட்டால் நாம் எப்போதும் இனிமையாக வாழலாம். எனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, ஒருமுறை நல்வாழ்வு ஆசிரமத்திற்கு சென்று தங்கி வருவது நல்லது. தென்னையும், பழ மரத் தோப்புகளுமாக பூத்துக்குலுங்கும் இயற்கை அழகில் அமைந்துள்ள காற்றின் தீண்டலும் பறவைகளின் விதவிதமான மொழிகளையும் தவிர வேறெதையும் உணர முடியாத, கேட்க முடியாத இனிமையான சூழலை கண்டுகளித்து வரலாம். டாக்டர் நல்வாழ்வு அவர்களின் எளிமையும் கிராமத்துப் பேச்சும் எம்மை பெரிதும் கவர்ந்தன. டாக்டர் நலவாழ்வு அவருடைய துணைவியார் திருமதி கலா மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருமே இதை ஒரு தொண்டாகவே செய்து வருகின்றனர். டாக்டர் சுமங்கலி, இரமணன், செல்வி தவமணி, இரகு, சபரீசன், வர்மா, முத்தப்பா, சின்னப் பையன் என அங்கு பணியாற்றும் யாரிடமும் கோபம், வெறுப்பு ஆகியவற்றை எள்ளின் முனையளவு கூட காண முடியாது. அனைவருமே பாராட்டுதலுக்குரியவர்கள். பொதுவாகவே, முதியோர்களே இணையர்களாக வந்து தன் இறுதிக் கால நோய்களுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தங்கள் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து இங்கு வந்து அறிந்து கொண்டால் வாழ்வு இனிமையாகவும் சீராகவும் இருக்கும் என்பது எம் கருத்தாகும். தங்குவதற்கு இடவசதி மிகக் குறைந்த கட்டணத்தில் நன்கு அமைத்துள்ளனர். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக! திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சென்று அங்கிருந்து ஆழ்வார் குறிச்சிக்குச் சென்றால் அடுத்த நான்காவது கி.மீ. தூரத்தில் உள்ளது சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம். முகவரி :மருத்துவர். இரா.நல்வாழ்வு, பி.என்.ஒய்.எஸ்., உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம் – 627412, ஆழ்வார்குறிச்சி (வழி), திருநெல்வேலி மாவட்டம்.தொலைபேசி : 04634 – 283484, 94430 43074, 9360 869 867www.universalgoodlife.com, Email : goodlifeashram@yahoo.co.in - சு.குமணராசன்"